ஹோட்டல் சாப்பாடு கவனம்....

Leave a Comment
நமது ஆரோக்யத்தை அடமானம் வைத்து , முழுக வைக்கும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்காமல் இருப்பதே புத்திசாலித்தானம். 



வீட்ல இட்லி, தோசையை விட்டா வேற ஒண்ணுமே கிடையாதா?’ என அலுத்துக் கொள்கிறவர்கள், வெளியே ஓட்டலுக்கு சென்றால் முதலில் ஆர்டர் செய்வதும் அதே இட்லி, தோசையாகத்தான் இருக்கும்.

பஞ்சு போன்ற வெள்ளை வெளேர் இட்லிக்கும், முறுகலான, பொன்னிற தோசைக்கும், இன்னும் சுளை சுளையான பரோட்டாவுக்கும், மிருதுவான  சப்பாத்திக்கும் பின்னணியில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்....

இட்லிக்கு மாவரைக்கும்போது முந்தைய நாள் மீதி ஆன, கெட்டுப்போன பழைய சாதத்தையெல்லாம் கலந்து அரைக்கிறார்கள். பழைய சாதம் ஆரோக்கியமானது தானே என்று நினைக்கலாம். (அது நம்ம வீட்டில் என்றால் சுத்தமாக சுகாதாரமா வைத்திருப்பார்கள்) ஆனால், சர்க்கரை நோயாளி, வயதானவர்களுக்கு இந்த இட்லி நல்லதில்லை.

கோதுமையின் கழிவுப் பொருள்தான் மைதா, இதில் நார்சத்து இல்லவே இல்லை. அதனால் குடலை விரைவில் பலம் இழக்கை வைத்து, அல்சர் போன்ற நோய்களை  ஏற்படுத்தும். இந்த மைதாவில்தான் விதவிதமான பரோட்டா செய்கிறார்கள். 

குறிப்பாக, நாம் விரும்பி சாப்பிடும் தோசை முறுகலாக வர கடலை மாவையும்\ சர்க்கரையையும் சேர்க்கிறார்கள். 

நீளமாக, மெலிதாக வரக் காரணம்  தோசை மாவில் பாதிக்குப் பாதி சேர்க்கப்படுகிற மைதா! சப்பாத்தியிலும் இதே கதைதான்!



‘‘ஓட்டல் உணவுகளில் முக்கியமாக நான்கு ஆபத்துகள் இருக்கின்றன’’ 

இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுகள் மிகுதியான வண்ணங்களில், கவர்ச்சிகரமாக இருப்பதில்லை. 

ஓட்டல்களில் செயற்கையான நிறமிகளை (Colouring agents) சேர்க்கிறார்கள். 

இந்த நிறமிகள் தோல் அழற்சி, குடல் அழற்சி, ஆஸ்துமா, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பது, எலும்புக் குறை பாடுகள் என பல பிரச்னை களை ஏற்படுத்துபவை. 

இரண்டாவது, வீட்டில் பயன்படுத்துவதைவிட உப்பு அதிகமாகப் பயன்படுத்து கிறார்கள். ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் தேவைக்கு அதிகமாக உப்பு பயன்படுத்துவதாலேயே ஏற்படுகிறது.  

மூன்றாவது அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய். 

நல்ல  கொழுப்பை (Polyunsaturated fat) தரும் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில் சமைத்த  உணவில் பிரச்னையில்லை.   

ஆனால், கெட்ட கொழுப்பை உண்டாக்கும் (Saturated fat) டால்டா, நெய், திருப்பித் திருப்பி சூடாக்கப் பட்ட எண்ணெய், மிருகக் கொழுப்பில் இருந்து கிடைக்கும் வெண்ணெய் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் மிகவும் ஆபத்தானவை. உடல் பருமனை ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாக நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு,   பக்கவாதம் என்று பல நோய்களை நிச்சயமாக ஏற்படுத்துபவை.  

இயல்பாகவே,  கார்போ ஹைட்ரேட் என்கிற மாவு உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்கிறோம். இதனால், கொழுப்போடு அதிகம் சேர்க்கிற மாவு  உணவுகளும் சேர்ந்து இரண்டு பக்கமும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

நான்காவதாக ஓட்டல் உணவுகளில் அதிகம் இருக்கும் இனிப்பு. ஸ்வீட் வகைகளில் மட்டும்தான் அதிக இனிப்பைச் சேர்க்கிறார்கள் என்று இல்லை.

சாதாரணமாக ஜூஸ் வகைகளில் கூட அதிக சர்க்கரை சேர்த்துத்தான் கொடுக்கிறார்கள். ஓட்டல் காபியில் டம்ளரின் அடியில் சர்க்கரை நிறைய இருப்பதைப் பார்க்க  முடியும். இந்த அதிகப்படியான சர்க்கரையும் கெட்ட கொழுப்பாகவே மாறுகிறது.  

இந்த காரணங்களோடு முக்கியமான இன்னொரு காரணம் சுகாதாரம்... 

ஓட்டலில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். உணவு தயாராவதில் பலரின் பங்கு ஈடுபடுகிறது. அனைவருமே சுத்தமாக இருப்பதற்கு உத்தரவாதம் இல்லை. வேலை பளுவால் சுத்தமாக இருக்க முயற்சிப்பதும் இல்லை. 

மஞ்சள் காமாலை, டைஃபாய்டு போன்ற பலவியாதிகள் சுத்தமில்லாமல் உணவைக் கையாள்வதாலேயே வருகிறது. 

தவிர்க்க முடியாமல் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால், தரமான உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். ஆரோக்கியத் துக்காக கொஞ்சம் மெனக் கெடுவதோ, செலவு செய்வதிலோ தவறு இல்லை.

சூடான உணவுகளை சாப்பிடுவது ஓரளவு பாதுகாப்பானது. 

சாலட், ஜூஸ், சட்டினி மற்றும் ஆறிப்போன  உணவுகளில் நிறைய நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்பு அதிகம். 

பொரித்த உணவுகள், உப்பு அதிகமாக இருக்கிற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  வெளிநாட்டு உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. 

முடிந்த வரை அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவுகள் மிக மிக அதிகமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. 

தரமான இறைச்சியாக இருந்தால் கூட மாதக்கணக்கில் இறைச்சிகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் வசதி வந்துவிட்டது. இறைச்சி மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்பிரின், நோவால்ஜின், பாரசிட்டமால் போன்ற  மாத்திரைகளைச் சேர்த்து சமைக்கிற கொடுமையெல்லாம் நடக்கிறது. அதனால், வெளியிடங்களில் அசைவத்தை தவிர்ப்பதே சிறந்தது. 

‘‘உணவகங்கள் முற்றிலும் வணிகமயமானவை. பணமே அங்கு பிரதானம் என்பதால் உணவுப் பொருட்கள் மற்றும் உணவின் மூலப்பொருட்கள் என  அனைத்திலும் கலப்படம் செய்கிறார்கள். 

முழு சாப்பாடு வழங்கும் உணவகங்களை பலரும் விரும்பிச் செல்வதற்கான காரணம் வயிறார சாப்பிட முடியும் என்கிற எதிர் பார்ப்புதான். ஆனால், குறைவான அளவு சாப் பிட்டதுமே வயிறு நிறைந்துவிடுகிறது. 

காரணம், சாப்பாடு தயார் செய்யும்போது அதனுள் சுண்ணாம்புக் கட்டி, களிப்பாக்கு, சோடா உப்பு ஆகியவற்றை கலந்து விடுவதுதான். 

இனிப்பு பண்டங்களில் சேர்க்கப்படும் கேசரி பவுடர்  100 பி.பி.எம். (Parts Per Million) அளவுக்குள்தான் இருக்க வேண்டும். ஆனால், 200 முதல் 400 பி.பி.எம். அளவு வரை நிறத்துக்காக  சேர்க்கின்றனர். கார உணவுப்பொருட்களில் நிறத்துக்காக ரசாயன பவுடரை சேர்க்கின்றனர். 

இன்று துரித உணவகங்கள் என்ற பெயரில் வேற்று நாட்டு உணவுகள் நிறைய கிடைக்கின்றன. இந்த உணவுகளில் சுவையைக் கூட்டுவதற்கென மோனோ சோடியம் க்ளூட்டமைட் (MSG) பயன்படுத்து கிறார்கள். 

இதற்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் எவ்விதத் தடையுமின்றி விற்கப்பட்டு வருகிறது. அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும் தேநீரின் மூலப்பொருளான டீத்தூளிலும்  கலப்படம் இருக்கிறது. 

பயன்படுத்தித் தூக்கிப் போடுகிற டீத்தூளை காய வைத்து, துணிக்குப் போடும் சாயத்தைக் கொண்டு நிறமேற்றி, புதிய டீத் தூள் போல் மீண்டும் சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.

உயர்தர உணவகங்களில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய், தயாரிப்பு  முடிந்த பின்னர் மலிவான விலைக்கு மற்ற உணவகங்களுக்கு விற்கப்படுகிறது. 

இட்லி மென்மையாக இருக்கக் கலக்கிற சோடா உப்பு உடலுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் பி ஊட்டச்சத்தை கிடைக்க விடாமல் தடை  செய்யும். அது மட்டுமில்லாமல், அசிடிட்டி, அல்ஸர் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். 

சுவைக்காகச் சேர்க்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோ  சோடியம் க்ளுட்டமைட் பசியின்மை, நரம்புத்தளர்ச்சி, அஜீரணம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். 

இனிப்பு பண்டங்களில் கேசரிப் பவுடர்  கலப்பது வயிற்று வலியையும், புண்களையும் ஏற்படுத்தும். இந்தக் கலப்படம் புற்று நோயை உண்டாக்கவும் காரணியாக இருக்கிறது.  

மொத்தத்தில் நாம் குடிக்கிற தண்ணீரில் இருந்து கடைசியாக மெல்லும் சோம்பு வரையில் ஓட்டல் உணவுகளில் இருக்கும் ஆரோக்கியக் கேடுகள்  நிறைய. 

முடிந்தவரை வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.  எப்போதாவது ஓட்டலில் சாப்பிடுவதே ஆரோக்கியக் கேடு என்றால், ஓட்டலில் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால்... கடவுளே!

ஹோட்டல் சாப்பாடு - வேண்டவே வேண்டாம்....
அன்புக்குரியவர்களுக்கும், அன்புக் குழந்தைகளுக்கும் தரவே  வேண்டாம்....

வீட்டு சாப்படை ருசிப்போம்.... வாழ்க்கையை என்றும் ரசிக்க
நம் குழந்தைகளும் நன்றாகத்தானே வாழவேண்டும்....





உதவலாமே..... 



0 comments:

Post a Comment