அன்புள்ள இடத்தில் எல்லாம் இருக்கும்!

Leave a Comment
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் வீட்டிற்குள் வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறினாள்.

அதற்கு அம்மூவரும் 'வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா' என்று கேட்கிடார்கள்.
அதற்கு அவள் 'அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்' என்று பதிலளித்தாள் .

அப்பொழுது அவர்கள் 'அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம்' என்று கூறிவிட்டார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறினாள். 

அதற்கு அவளது கணவன் 'நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா- என்று சொன்னார். 

அவளும் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைததாள்..
அதற்கு அவர்கள் 'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது' என்று கூறிவிட்டார்கள்.

'ஏன் அப்படி' என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து 'இவர் செல்வம்' என்றும், மற்றொருவரை காண்பித்து 'இவர் வெற்றி' என்றும் 'நான் அன்பு' என்றும் கூறி, 'உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல்' என்றும் அவளிடம் கூறினார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறினாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்யமாக இருக்கிறது!'. என்று கூறிவிட்டு, 'நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார்' என்று தன் மனைவியிடம் கூறினார்.

அதை கேட்ட அவருடைய மனைவி , 'ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது?' என்று கேட்டாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், 'ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா?' என்று அவள் தன் கருத்தை கூறினாள்..

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்தனர். 

பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்றார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து 'உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன்' என்றாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்லப் புறப்பட்டார்.  அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும்கூட செல்லத் துவங்கினர்!

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் 'ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? 'என்று ஆச்சர்யப்பட்டு கேட்டாள். 

அதற்கு மற்ற இருவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், 'நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். அன்பு எங்களுக்கும் பிடித்ததே. எங்கு அன்பு இருக்கிறதோ அங்குதான் எங்களுக்கும் இருப்பதில் ப்ரியம்!' என்று  செல்வம், வெற்றி இருவரும் பதிலளித்தார்களே பார்க்கலாம்! 

அன்புதானே நம்மையும் யாரையும் அதிக சந்தோஷப்பட வைக்கும்!

0 comments:

Post a Comment