பாரதமும் தமிழகமும்

 மொழிவாரி மாநிலங்கள் உருவானதன், வருந்த வைக்கும் பின்புலங்கள்:




சரித்திரத்தில் சில பக்கங்கள் பின்னோக்கிப் பயணிப்போம்



நாடு சுதந்திரம் பெற்றபோது, பிரிட்டீஷார் ஆளுகையின் கீழ் கொண்டிருந்த அதே நிர்வாக வசதிகளுடன் மாகாண அரசுகளும் (மாநிலங்கள்), அதன் ஒருங்கிணைப்பான மத்திய அரசும் அமைக்கப்பட்டன.



அது சுதந்திரத்துக்கு முந்தைய நிர்வாக அமைப்பே.



'நாட்டில் பெரும்பாலான பகுதிகள் மொழி அடிப்படையில் தனித்து இருந்ததால் மொழி அடிப்படையில் தனி மாநிலங்கள் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை 1950-களில் எழுந்தது. இதுபோன்ற கருத்துக்கள் பிறக்க காரணமான, பல காரணிகளில் முக்கியமானதை நாம் அறிய வேண்டும்.

 

தீர்கமாக ஆராய்ந்தால், நமது அமைப்புகளுக்குள் சில அரைவேக்காடுகளை அன்னிய சதிகாரர்கள் குழப்பி, அவர்களை அங்கீகரிக்க வைக்கிறார்கள்.

 

பிறகு அவர்களின் மூலமாக மற்றவர்களிடம் கருத்தைப் பரப்புவது, தலைமைக்கு கொண்டு செல்வது, ஏற்க வைப்பது அல்லது நெருக்கடி ஏற்படுத்துவது இதெல்லாம் அவர்களின் தந்திரம். விடுதலையைக் கொடுத்த பிறகும் கூட, அவர்களுக்கு இங்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்த கைக்கூலிகளை ஏற்படுத்திக்கொள்வது, போன்றவைகளும் அவர்களின் செயல் தந்திரம்.



ஆரம்பத்தில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலும் அதனை ஏற்கவில்லை. ஆனால் பெரும்பாலான மாநில காங்கிரஸ் கமிட்டிகள், நிர்வாகம் & தொடர்பு வசதிக்காக மொழி அடிப்படையில் இயங்கிவந்தன.



இந்நிலையில் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைப் பிரித்து அதனை விசால ஆந்திராவாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.



இதற்கு வித்திட்டவர், ஆந்திர காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பொட்டி ஸ்ரீராமுலு. அவர் தனது கோரிக்கையை முன்னிறுத்தி, சென்னையில் 1952, அக். 19-இல் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார்.



இறுதியில், 1952, டிச. 15-இல் உண்ணாவிரத நிலையிலேயே காலமானார். 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தனது கட்சித்தலைவரின் உயிர் பிரிந்ததால், தொண்டர்களிடம் ஏற்பட்ட மனக் கவலைக்கு சமாதானம் தர,

தெலுங்கு பேசும் பகுதிகள் தனி மாநிலமாக்கப்படும் என்று பிரதமர் நேரு அறிவிக்க வேண்டி வந்தது.



அதன்படி, 1953, அக். 1-இல் தனி ஆந்திரப் பிரதேச மாநிலம் உதயமானது.

ஆந்திர மாநில உருவாக்கம், பிறகு மற்ற மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்கு வழியை ஏற்படுத்தியது.



அதே ஆண்டில் (1953) ஃபஸல் அலி, கே.எம்.பணிக்கர், எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் அடங்கிய மாநில மறு சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.



அவர்கள் அளித்த பரிந்துரைப்படி 1956-இல் மாநில மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.



அதன் அடிப்படையில் 1956, நவ. 1-இல் மொழி அடைப்படையில் 14 மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

உடன் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.

 

பிற்பாடு மேலும் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

மும்பை மாகாணம் 1960-இல் தான் இரண்டாகப் பிரிக்கப்பட்டு குஜராத், மஹாராஷ்டிரா என்ற இரு மாநிலங்களானது.



1956-இல் நடைபெற்ற மாநிலப் பிரிவினையில் சென்னை மாகாணத்தின் கீழிருந்த மளையாளப் பகுதிகள் கேரளமாகின.


கொள்ளேகால், கொல்லங்கோடு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகள் மைசூரு மாகாணத்துடன் இணைந்து கர்நாடகா ஆகின.



பிறகும்கூட மீதிப்பகுதிகள் சென்னை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டன.

 

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்துக்கு செல்லாமல் தடுக்க,

நேசமணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், டி.வி.ராமசுப்பய்யர் ஆகியோர் போராடி வென்றனர்.



அதேபோல, திருத்தணி பகுதி ஆந்திரத்துடன் செல்லாமல் தடுக்க ம.பொ.சிவஞானம் போராடி வென்றார்.



மதராஸ் மனதே’ என்று தெலுங்கு அரசியல்வாதிகள் கோஷமிட்டபோது அதை எதிர்த்து ம.பொ.சி.யின் ‘தமிழரசுக் கழகம்’ போராடியது.

இன்று சென்னை தமிழகத்தின் தலைநகராக இருப்பதே அதனால்தான்.



பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே அதிகமாகக் கொண்ட சென்னை மாகாணத்துக்குதமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு காங்கிரஸ் தலைவரால்தான் முன்னிறுத்தப்பட்டது.



அவர் தியாகி சங்கரலிங்கம். அதற்காக, அவர் விருதுநகரில் 1956 ஜூலை 27 முதல் 1956 அக். 13 வரை 78 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்.

 

அதன் விளைவாக, உண்ணாவிரதம் இருந்த தனது கட்சித்தலைவரின் உயிர் பிரிந்ததால், தொண்டர்களிடம் ஏற்பட்ட மனக் கவலைக்கு சமாதானம் தர, முன்பு பிரதமர் நேரு எடுத்த அதே தீரவை, முதல்வராக இருந்த காமராஜர் எடுக்கவேண்டிய நிர்பந்தம் வந்தது.

 

எனவே காமராஜர் 1962இல் தமிழ்நாடு மாநிலப் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டுவந்தார்.



பிறகு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோதும் 1964 இல் இதே தீர்மானத்தை கொண்டுவந்தார்.



ஆனால், அவை நிறைவேறவில்லை.

திமுக ஆட்சி அமைத்த பின்னர் அண்ணாதுரை முதல்வரான பின், தமிழ்நாடு என்று சென்னை மாகாணம் பெயர் மாற்றம் பெற்றது (1968, ஜூலை 18).



பிறகு, காலப்போக்கில் நாட்டின் மாநிலங்களின் எண்ணிக்கை 29 ஆகவும், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால் நிலப்பரப்பு எதுவும் அதிகமாகவில்லை, மாறாக குறைந்துள்ளது என்று சொல்லலாம். இதுதான் சரித்திரம்!



‘மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவது நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாகிவிடும்’ என்று நேருவும், தேசபக்தர்களும்  அன்று அஞ்சியது உண்மையாகிவிட்டது.



இன்று மாநில எல்லைப் பூசல்கள் பல இடங்களில் பூதகரமாகி வருகின்றன. மஹாராஷ்டிரா- கர்நாடகா இடையே பெலகாவிக்காக நடக்கும் போராட்டம் அதில் குறிப்பிடத் தக்கது.



மேலும், பல மாநிலங்களிடையே பாயும் நதிநீரை சுமுகமாகப் பங்கிடுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணம்: காவிரி, மகாநதி, பெரியாறுப் பிரச்னைகள்.



மொழிவாரி மாநில நிர்வாக வசதி அமைப்பானது, மெல்ல மெல்ல மொழிவாரித் தனி இனம் என்ற உணர்வினை ஏற்படுத்திவிட்டது.



உதாரணம்: காவிரி நதிப் பிரச்னைகள்.

பல ஆயிரம் தலைமுறைகளாக ஒற்றுமையாக இருந்து, மொகலாய, கிருஸ்தவர்களின் ஆட்சிகளை அகற்ற ஒற்றுமையாக போராடிய, இந்த பெரும் சமூகம், மொழிவாரி பிரிப்பினால் பிரியத் துவங்கியது.



மொழிவாரி மாநிலங்களுக்கு வித்திட்டது ஆந்திரப் பிரதேச உதயம். இன்று அந்த மாநிலமும் இரண்டாகிவிட்டது-



ஆந்திரம்- தெலுங்கானா என்று! ஒரே தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் இரு மாநிலங்களாகப் பிரிந்ததன் காரணம் அரசியல் மட்டுமே.



இங்கு மக்களை மொழியால் பிணைக்க முடியவில்லை.



மத அடிப்படையில் ஒரு நாடாக உருவான பாகிஸ்தான் மொழி அடிப்படையில் இரு நாடாகி, பங்களாதேஷ் உருவானதையும் நாம் அறிவோம்.



ஆக, மொழிவாரி மாநில அமைப்பு மக்களைப் பிணைப்பது அல்ல என்பது தெளிவாகிறது.



மராத்தி பேசும் மக்களை அடிப்படையாகக் கொண்டே மகாராஷ்டிரா மாநிலம் அமைந்தது. இன்று அதே மாநிலத்தில் விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை அதே மொழி பேசும் மக்கள் எழுப்புகின்றனர்.



அதற்கு பொருளாதார ரீதியாக் தாங்கள் பின்தங்கி இருப்பதை விதர்ப்பா பகுதி மக்கள் காரணமாகக் கூறுகின்றனர்.



தெலுங்கானாவும் அதே காரணத்தால் தான் பிரிந்தது.

எனில், மக்களை மொழிவாரியாகப் பிரித்தது,

நிர்வாக ரீதியாகப் பலனளிக்கவில்லை என்பது உறுதியாகிறது.



நமது சில தலைவர்களின், 'மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால் மாநில முன்னேற்றம் விரைவுபெறும்' என்ற கனவு- பகல் கனவே என்பது தெரியவந்திருக்கிறது.



அதே சமயம், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், ஒரு நாடாக நாம் தொடர்ந்து உணர, வாழ பொதுவான நமது கலாச்சாரப் பிணைப்புகளே காரணம்.



நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மகாகவி பாரதி செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று பாடிய வரிகளின் ஊக்க சக்தி எது? அதுவே நம்மை இணைக்கிறது. அதை அழிக்க, துண்டாடவே வெள்ளை கிருஸ்தவர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து, இன்றும் பல முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

 

உண்மையில் கிட்டத்தட்ட 20000 தலைமுறைகளாக நமது முன்னோர்கள், மெழிரீதியாக தங்களை என்றுமே வேறுபடுத்திக்கொண்டு பார்த்தது இல்லை. ஆனால், திருட வந்திருந்த அன்னியர்கள், பிரித்தாளும் ஒரு தந்திரமாக, ஒரு சதியாகவே புல்லுறுவிகள் மூலமாகவும், கல்வி மூலமாகவும் இதை பரப்பினர்.

 

அன்று மொழிவாரி மாநிலம் அமைந்ததைக் கொண்டாடத் துடித்தவர்கள் பலரும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களாக இருந்ததை, இன்று புரிந்துகொள்ள முடிகிறது.



ஆனாலும், அவர்களால் நடந்த நன்மைகளுக்காக அவர்களை என்றும் மதிப்போம். அதே சமயம் பெரியவர்களிடம் ஏதாவது பிழைகள் நடந்திருந்தால், அவற்றை, நாமே முன்பு அறியாப் பருவத்தில், சில அறியாமைத்துடிப்பால் செய்ததாகக் கருதி, திருத்திக்கொண்டு செல்வோம்.


வரும் சந்ததிகளுக்கு பாதுகாப்பு மிகுந்த, ஒற்றுமையும் ஒத்துழைப்புகளும் உதவிகளும், பலமும், சுகமும் நிறைந்த நாட்டினை அமைத்துச் செல்வோம்.