பாரம்பர்ய பெருமை மிகுந்த காசி !

Leave a Comment






நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது.

காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது!

கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது!

உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 

'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். 

கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. 

அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. 

இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட  பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள்! 

இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன.

எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை!

கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. 

இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. 

படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை! சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது.

படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்),
ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி.....
இவர்களையும் காணலாம்!

காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள்!

தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது!

மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை!
புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம்.

ராம், ராம் என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். 

காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம்! 

ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது.

முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது!

தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது! லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம்! வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது! கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். 

இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும்.
பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது.

காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். 

காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம்!

காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள்.

காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும்.

படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். 
.
மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம்.

காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது! 

ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த  புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம்!





"காசி" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..?
காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது.
சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.
இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள்.
4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ஆகாஷ்தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.
ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.
பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.
முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.
இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?
468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு சப்தரிஷிபூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.
அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.
இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம்.
இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.




காசியின் இருப்பிடம் : 
https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=!4m2!3m1!1s0x0:0x48600e4fcdfb7b13?hl=en-US

0 comments:

Post a Comment