கதை: பஞ்ச தந்திரக் கதைகள்

Leave a Comment
வேதியனை விளக்கி முடவனைச் சுமந்தவள்...
4.4. தாரா நகரத்தில் சத்தியவிரதன் என்ற ஒரு வேதியன் தன் மனைவியோடு வாழ்ந்துவந்தான். அவன் மனைவி அக்கம் பக்கத்தில் இருப்போரிடம் சண்டையும் கலகமும் செய்துகொண்டிருந்தாள். அவளைத் திருத்த முடியாத அந்த வேதியன், அவளை அழைத்துக்கொண்டு வேறு நகரத்திற்குச் சென்றான்.
செல்லும் வழியில் அவளுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தது. அவள், ‘எனக்கு உடனே தண்ணீர்வேண்டும். தண்ணீர் இல்லையேல் நான் இந்தத் தாகத்தாலேயே இறந்துவிடுவேன்’ என்று கூறினாள்.
உடனே அந்த வேதியன் தண்ணீர் தேடிச் சென்றான். வெகுநேரம் கழித்தே அவனால் தண்ணீர்கொண்டு வரமுடிந்தது. அதற்குள் அவள் இறந்துவிட்டாள். வேதியன் அழுது புலம்பினான்.
அப்போது வானில், ‘உன் வயதில் இவளுக்குப் பாதியைக் கொடுத்தால் இவள் மீண்டும் உயிர்பெறுவாள்’ என்று ஓர் அசரீரி ஒலித்தது.
உடனே அவன் அவ்வாறே தருவதாகத் தன் மனத்தில் நினைத்துக்கொண்டான். அவள் உயிர்பெற்றாள். பின்னர் அவள் அவன் கொண்டுவந்த தண்ணிரைப் பருகினாள். பின்னர் அவர்கள் இருவரும் தொடர்ந்து நடந்து ஒரு நகரத்தினை அடைந்தனர்.
அங்கு ஓர் இடத்தில் அவளைத் தங்கவைத்துவிட்டுக் கடைக்குச் சென்றான் வேதியன். தனியாக இருந்த அவளிடம் ஒரு முடவன் தவழ்ந்துவந்தான். அவன் இனிமையாகப் பாடினான். அவன் பாட்டில் மயங்கிய இவள் அவனுடன் இணைந்தாள்.
திரும்பிவந்த வேதியன் தனது மனைவியின் அருகில் ஒரு முடவன் இருப்பதைப் பார்த்து, ‘இவன் யார்?’ என்று அவளிடம் விசாரித்தான்.
‘நான் தனியாக இருந்தபோது, இவனே எனக்குத் துணையாக இருந்தான்.’ என்றாள். வேதியனுக்கு முடவன் மீதும் தன் மனைவி மீதும் எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. இதனைப் புரிந்துகொண்ட மனைவி, ‘நாம் இவனுக்கு உணவளிப்போமா?’ என்றாள். வேதியன் அதற்குச் சம்மதித்தான்.
பின்னர் இவர்கள் வேறு இடத்துக்குப் புறப்படும்போது, அவள், ‘இவனை நம்முடனே வைத்துக்கொள்வோமா?’ என்றாள். இவளையும் முடவனையும் நம்பியதால் வேதியன் அதற்கும் ஒப்புக்கொண்டான்.
‘ஆனால், இவனால் நடக்க முடியாதே! இவனை எப்படி நம்முடன் அழைத்துச்செல்வது? என்று கேட்டான் வேதியன்.
அவள், ‘நான் இவனை என் முதுகில் சுமந்து செல்வேன்’ என்றாள். தன் மனைவியின் இரக்க குணத்தை நினைத்து மனம் மகிழ்ந்த அவன் அதற்கும் சம்மதித்தான்.
செல்லும் வழியில் வேதியன் ஒரு கிணற்றின் கரையில் படுத்து ஓய்வெடுத்தான். இதுதான் சமயம் என்று நினைத்த அவள் வேதியனை அந்தக் கிணற்றில் தள்ளிவிட்டாள். பின்னர் அந்த முடவனை ஒரு பெட்டிக்குள் அமரச்செய்து தன் தலையில் அவனைச் சுமந்துகொண்டு சென்றாள்.
வழியில் சென்ற காவலாளிகள், தலையில் பெட்டியுடன் செல்லும் அவளைக் கண்டவுடன் சந்தேகப்பட்டு, அவளை ராஜாவிடம் அழைத்துச் சென்றனர்.
தன்னை விசாரித்த ராஜாவிடம், ‘இவர் என் கணவர். இவரால் நடக்க முடியாது. இவருக்கு நோயுள்ளது. மனைவி என்ற முறையில் இவரை நான்தானே பாதுகாக்கவேண்டும்!’ என்றாள். இவளின் கற்புத் தன்மையைக் கண்டு கண்கலங்கிய ராஜா, அவளைத் தன் உடன்பிறந்தவளாகக் கருதி அவளையும் முடவனையும் அரண்மனையில் தங்கவைத்து உபசரித்தார்.
கிணற்றில் தள்ளி விடப்பட்ட வேதியன் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அப்போது வழிப்போக்கன் ஒருவன் தண்ணீர்த் தாகம் ஏற்பட்டதால் அருகில் இருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் பருக நினைத்துக் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்.
அங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வேதியனைக் கண்டு, அருகிலிருந்த ஆட்களை அழைத்து கிணற்றில் குதிக்கச் சொல்லிக் காப்பாற்றினான். பின்னர் வேதியன் தன் மனைவியையும் அந்த முடவனையும் தேடிச் சென்றான்.
அரண்மனை மாடத்திலிருந்து வீதியில் செல்லும் வேதியனைப் பார்த்த அவனது மனைவி, அரண்மனைக் காவலர்களிடம் சென்று, ‘அதோ அந்த வேதியன், என்னையும் முடமாகவுள்ள என் கணவரையும் கொல்ல வருகிறான்’ என்று கூறினாள்.
அவர்கள் வேதியனைப் பிடித்து ராஜாவின் முன் நிறுத்தினர். ராஜா நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டார். வேதியனைத் தீர விசாரித்த நீதிபதி உண்மையை அறிந்துகொண்டு, ராஜாவிடம் கூறினார். ராஜா வேதியனை விடுவித்து, வேதியனின் மனைவியையும், முடவனையும் தண்டித்தார்.
‘ஆதலால், பெண்களின் பேச்சினைப் புத்திசாலிகள் கேட்கத் தயங்குவர். அவர்களின் பேச்சினை நம்பினால், நந்தனராஜாவும் வரருசியன் என்ற மந்திரியும் அவமானப்பட்டதுபோல நாமும் அவமானப்பட நேரிடும்’ எனக் குரங்கு கூறியது.
‘அவர்கள் எத்தகைய அவமானத்தை அடைந்தார்கள்?’ என்று கேட்டது முதலை. குரங்கு அந்தக் கதையினைக் கூறத் தொடங்கியது.
4.5. குதிரையும் மொட்டையும்
வீரத்திலும் தீரத்திலும் மிகவும் சிறந்தவரான நந்தனராஜா தனது நாட்டை சீரும் சிறப்புமாக அரசாட்சி செய்து வந்தார். அவருக்கு வரருசியன் என்ற மந்திரி இருந்தார். ராணியும் மந்திரியின் மனைவியும் நெருங்கிய தோழிகள்.
ஒருநாள் மாலையில் அந்தப்புரத்தில் ராஜாவுக்கும் ராணிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ராஜா எவ்வளவோ கூறியும் ராணி சமாதானமாகவில்லை.
‘நான் என்ன செய்தால் உன் கோபம் தணியும்?’ என்று கேட்டார் ராஜா.
‘நீங்கள் ஒரு குதிரையைப் போலக் கடிவாளம் கட்டிக்கொண்டு, என்னைச் சுமந்துகொண்டு குதிரையைப் போலவே கனைக்கவேண்டும்’ என்றாள்.
வேறுவழி இல்லாததால் ராஜா, குதிரையின் கடிவாளத்தைத் தன் வாயில் கவ்விக்கொண்டு ராணியைத் தன்முதுகில் சுமந்து, குதிரையைப் போலவே கனைத்தார். ராணியின் கோபம் தணிந்தது.
இந்த நிகழ்வை ராணியின் தோழியாகிய மந்திரியின் மனைவி பார்த்துவிட்டாள். அன்று இரவு தன் வீட்டுக்குச் சென்ற அவள், தன் கணவரிடம் எந்தக் காரணமும் இல்லாமல் கோபித்துக்கொண்டாள்.
மந்திரி பலவாறு கூறியும் அவளின் கோபம் தணியவில்லை.
‘நான் என்ன செய்தால் நீ உன் கோபம் தணியும்?’ என்று கேட்டார் மந்திரி.
‘நீங்கள் உங்கள் தலையினை மொட்டையடித்துக்கொண்டு என்னைச் சுற்றிவந்து என் காலில் விழுந்து வணங்கவேண்டும்!’ என்றான் அவள்.
வேறுவழி இல்லாததால் மந்திரி, தன் தலையினை மொட்டையடித்துக்கொண்டார். தன் மனைவியைச் சுற்றிவந்து அவள் காலில் விழுந்துவணங்கினார்.
மறுநாள் அரசபைக்கு வந்த மந்திரியைப் பார்த்த ராஜா, ‘என்ன மந்திரியாரே! திடீரென்று மொட்டைபோட்டுள்ளீர்?’ என்றார்.
அதற்கு மந்திரி, ‘ராஜா! தாங்கள் குதிரையைப் போலக் கனைத்ததால்தான் நான் திடீரென்று மொட்டைபோட வேண்டியதாயிற்று’ என்றார்.
அரசவையில் இருந்தவர்களுக்கு ஏதும் புரியவில்லை. பின்னாளில் இதன் காரணத்தைத் தெரிந்துகொண்டவர்கள் மந்திரிக்குத் தலைமுடி வளரும் வரை அவரைக் கேலிசெய்தனர். குதிரை கனைக்கும் சப்தத்தைக் கேட்கும்போதெல்லாம் ராஜாவை நினைத்துச் சிரித்தனர்.
‘ஆதலால், பெண்கள் இத்தகைய பேச்சுக்களைப் பேசும்போது ஆண்கள் மௌனமாக இருந்துவிடவேண்டும். மறுமொழி பேசினால், புலித்தோலைப் போர்த்திக்கொண்டிருந்த கழுதை போலத் துன்பமடைவான்’ என்றது குரங்கு.
‘கழுதை ஏன் புலித்தோலைப் போர்த்திக்கொண்டது?’ என்று கேட்ட முதலைக்குக் குரங்கு அந்தக் கதையினைக் கூறத்தொடங்கியது.
4.6. புலித்தோல் போர்த்திய கழுதை
நர்மதை நதிக்கரையில் வாழ்ந்த வண்ணான் ஒருவன் கழுதை ஒன்றை வளர்த்து வந்தான். அவன் தொழில் சிறப்பாக நடைபெறாததால் வண்ணான் மிகவும் வறுமையில் வாடினான். அதனால் அவன் தன் கழுதைக்கும் சரிவர உணவுகொடுக்கவில்லை. அதனால் அந்தக் கழுதை உடல் இளைத்துக் கொண்டே வந்தது.
ஒருநாள் அவன் காட்டுக்கு அருகாமையில் சென்றுகொண்டிருக்கும்போது அங்கே ஒரு புலித்தோலினைக் கண்டெடுத்தான். அதனைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு யோசனை வந்தது.
அதனைக் கொண்டுவந்து தன் கழுதையின் மீது போர்த்தினான். இரவில் அதனை வெளியில் நடத்திச்சென்று அக்கம் பக்கத்தில் உள்ள தோட்டங்களில் அதனை அனுப்பிப் பயிர்களை மேயவைத்தான். தோட்டக் காவலர்கள் இதனைப் புலி என்று நினைத்துப் பயந்து ஓடினர். கழுதையும் எந்தத் தொந்தரவும் இன்றி தனது பசி தீர பயிர்களை ஆசையாகச் சாப்பிட்டு வந்தது.
இதுபோலவே நாள்தோறும் இரவில் தன் கழுதைக்குப் புலித் தோலைப் போர்த்திய அந்த வண்ணான், அதனைப் பக்கத்துக் கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று அங்குள்ள பயிர்களையும் மேயச்செய்தான். அங்கிருந்த இரவுக் காவல்காரர்களும் இந்தக் கழுதையைப் புலி என்று நம்பி விலகி ஓடினர்.
ஒருநாள் வழக்கம்போல அந்தக் கழுதை வயலில் மேய்ந்துகொண்டிருக்கும்போது, தூரத்தில் ஒரு பெண் கழுதையின் குரல் கேட்டது. உடனே புலித்தோலைப் போர்த்தியிருந்த இந்தக் கழுதையும் கத்தத் தொடங்கியது. பயந்து ஒதுங்கியிருந்த தோட்டக் காவலர்கள், இது புலி அல்ல, கழுதை என்பதனைப் புரிந்துகொண்டார்கள். அதன் மேலிருந்த புலித்தோலைப் பறித்துக்கொண்டு, கழுதையை அடித்து விரட்டினார்கள்.
‘ஆதலால், பெண்களுடன் வீணாகப் பேசக்கூடாது’ என்றது குரங்கு. முதலை தன் தவறினை உணர்ந்தது.
முதலைக்கு மேலும் அறிவுறுத்தும் வகையில், குரங்கு சொல்லியது: ‘முதலையே! நீ உன் மனைவியின் மீதுகொண்ட அன்பின் காரணமாகத்தான் என்னைக் கொல்லவந்தாய். உன் மீது எந்தக் குற்றமும் இல்லை. அவன் மீது உனக்குள்ள விசுவாசத்தால்தானே நீ அவள் கூறிய காரியத்தில் இறங்கினாய். இத்தகைய மனநிலை சாதுக்களின் சேர்க்கையாலும் மாறாது. உன்னைப் போன்ற தீய மனம்கொண்டவர்களுக்கு அறிவுரை கூறுவதும் பயனற்றதுதான்’ என்றது குரங்கு.
அப்போது கங்கைக் கரையில் நீந்தி வந்த ஒரு விலங்கு அந்த முதலையிடம், ‘முதலையே! அக்கரையில் உன் பெண் முதலை இறந்து கிடக்கிறாள்’ என்றது.
அந்தச் செய்தியைக் கேட்ட முதலை கலங்கியது. பின்னர், அந்த முதலை, ‘முன்பு நான் என் நண்பனுக்கு விரோதியானேன். இப்போது என் மனைவியின் உயிரையும் பறித்துவிட்டேன். எனக்கு மட்டும் ஏன் இப்படித் துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன? அவள் இல்லாத என் வீடு சுடுகாடாக மாறிவிடுமே!’ என்று புலம்பியது.
பின்னர் அது அந்தக் குரங்கிடம், ‘நண்பா! நான் என்னுடைய தவறுகளுக்காக இங்கேயே நெருப்பினை வளர்த்து அதில் விழுந்து உயிரைவிடப்போகிறேன்’ என்றது.
‘நீ ஏன் உயிரைவிடவேண்டும்? உன்னைத் தவறு செய்யத் தூண்டியது அவள். அவள் இறந்ததற்காக நீ வருந்தவேண்டாம். அந்தப் பொல்லாதவள் இறந்ததற்காக நீ மகிழ்ச்சியடைய வேண்டும். ஆதலால், நீ உன் வீட்டிற்குச் செல்’ என்றது குரங்கு.
குரங்கின் பேச்சினைக் கேட்டுத் தன் வீட்டிற்குச் சென்ற முதலைக்கு அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த முதலையின் வீட்டிற்குள் வேறொரு பெரிய முதலை குடியேறிவிட்டது. இந்த முதலையை அது உள்ளேயே விடவில்லை. வேறுவழியின்றி வீதியில் நின்ற அந்த முதலைக்கு மீண்டும் தன் குரங்கு நண்பனின் நினைவுவந்தது.
உடனே கங்கையைக் கடந்து தன் குரங்கு நண்பனைக் காணவந்தது.
முதலையைப் பார்த்த அந்தக் குரங்கு, ‘ஏய் நன்றிகெட்டவனே! மீண்டும் ஏன் இங்கு வந்தாய்?’ என்று கோபமாகக் கேட்டது.
‘நண்பா! உன்னைவிட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள்? என் வீட்டை வேறு ஒரு பெரிய முதலைக் கைப்பற்றிக்கொண்டது. இப்போது நான் என்ன செய்ய?’ என்றது அந்த முதலை.
‘உன்னைப் போன்ற முட்டாளுக்கு அறிவுரை கூறினால், வீடு உடையவன் வீடிழந்த கதையாகிவிடும்’ என்றது குரங்கு.
‘அது என்ன கதை?’ என்று கேட்ட அந்த முதலைக்குக் குரங்கு அந்தக் கதையினைச் சொல்லத் தொடங்கியது.
4.7. குரங்குக் கை
ஒரு சிறிய காடு. அங்குள்ள ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. அதே மரத்தில் ஒரு குரங்கும் வசித்துவந்தது. தூக்கணாங்குருவிகள் தன் கூட்டில் ஓய்வெடுக்கும்போது, அந்தக் குரங்கு மரக்கிளையில் சாய்ந்துகொண்டு ஓய்வெடுக்கும்.
இதனைப் பார்த்த ஆண் தூக்கணாங்குருவி, ‘குரங்கே நீயும் எங்களைப் போல ஒரு கூடுகட்டிக்கொண்டு அதில் வாழலாமே! என்றது.
குரங்கு, ‘எனக்குக் கூடுகட்டத் தெரியாது’ என்றது.
‘கைகள் இல்லாத நாங்களே கூடுகட்டும்போது கைகள் இருக்கும் நீ ஏன் கூடுகட்டப் பழகிக்கொள்ளக் கூடாது?’ என்றது ஆண் தூக்கணாங்குருவி.
‘நான் எதைப் பழகவேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீ எனக்கு அறிவுரை கூறவேண்டாம்’ என்று குரங்கு கூறியது.
அப்போது பெண் தூக்கணாங்குருவி, ஆண் குருவியைப் பார்த்து, ‘உங்களுக்கு ஏன் இந்த வேலை? அந்தக் குரங்கு கூடுகட்டினால் என்ன, கட்டாவிட்டால் நமக்கு என்ன? நீங்கள் ஏன் அந்தக் குரங்குக்கு அறிவுரை கூறுகிறீர்கள். அந்தக் குரங்கு கோபப்பட்டு ஏதாவது செய்துவிட்டால் நமக்குத்தானே தொல்லை. உங்களுக்கு அறிவேயில்லை! ’ என்று திட்டி அடக்கியது.
ஒருநாள் அந்தக் காட்டில் பெரும் புயற்காற்று வீசியது. கனமழை பொழிந்தது. அந்த மரமே ஆடியது. இரண்டு தூக்கணாங் குருவிகளும் தன்கூட்டில் பத்திரமாக அமர்ந்துகொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.
அப்போது குரங்கு மட்டும் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே அந்த மரத்திற்கு வந்தது. அதனைப் பார்த்த இரண்டு தூக்கணாங்குருவிகளும் இரக்கப்பட்டன.
பெண் தூக்கணாங்குருவி, ‘அந்தக் குரங்கிடம் ஏதும் பேசாமல் அமைதியாக இருங்கள்!’ என்று ஆண் குருவியிடம் சொன்னது.
ஆனால் ஆண் தூக்கணாங்குருவி அதைக் கேட்காமல், குரங்கைப் பார்த்து, ‘ஏய், குரங்கே! ஒரு கூடு கட்டிக்கொள் என்று நான் அன்றே உனக்கு அறிவுரை கூறினேன் அல்லவா? அப்போதே உன் கைகளால் கூடுகட்டப் பழகியிருந்தால், இன்று ஒரு கூட்டினைக் கட்டியிருப்பாய். எங்களைப் போல நீயும் மழையில் நனையாமல் நிம்மதியாக இருந்திருக்கலாம். நீ தான் என் பேச்சைக் கேட்கவில்லை. இப்போது அவஸ்தைபடுகிறாய்!’ என்றது.
குரங்குக்கு அவமானமாக இருந்தது. ‘இந்தச் சின்னக் குருவி நமக்கே அறிவுரை கூறுகிறதா!’ என்று நினைத்துக் கோபப்பட்டது. ‘எனக்குக் கைகள் இருக்கிறது. அந்தக் கைகளுக்குக் கூடு கட்டத்தெரியாது. ஆனால், ஒரு கூட்டினைப் பிரித்துவிட அந்தக் கைகளுக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறி, அந்தத் தூக்கணாங்குருவிகளின் கூட்டினைப் பிரித்துப் போட்டுவிட்டது.
அந்தக் குரங்கினைப் போலவே, இந்த இரண்டு தூக்கணாங்குருவிகளும் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கத் தொடங்கின.
‘ஆதலால், நான் உனக்கு அறிவுரை கூறினால், எனக்கு அந்தத் தூக்கணாங்குருவிகளின் நிலைதான் ஏற்பட்டுவிடும்’ என்று கூறியது குரங்கு.
முதலை, ‘நண்பா! நான் முட்டாள்தான், குற்றவாளிதான். என்னை மன்னித்துவிடு. நான் உன்னுடைய பழைய நண்பன்தானே! நீ எனக்கு ஒரு யோசனையைக் கூறு. நான் எப்படி என் வீட்டைத் திரும்பப் பெறுவது?’ என்று கேட்டது.
குரங்கு, ‘நல்லவனுக்குக் கும்பிடும், சூரனுக்குப் பேதமும் காரியக்காரனுக்குத் தாளமும் ஈடானவனுக்குத் தண்டமும் செய்தாற்போலச் செய்யவேண்டும்’ என்று ஒரு யோசனையைக் கூறியது.
‘அது எப்படி? எனக்கு விளக்கமாகக் கூறு?’ என்ற முதலைக்கு அந்தக் குரங்கு கதை ஒன்றினைக் கூறியது.
4.8. நரியின் புத்திசாலித்தனம்
ஒரு பெரிய மலையின் சரிவில் சதுரன் என்ற நரி வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது இரைதேடி அலைந்து கொண்டிருக்கும்போது, இறந்த ஒரு யானையின் உடலைக் கண்டது.
அந்த யானையின் தோலை உரிக்கும் அளவிற்கு அதன் கால்களில் வலு இல்லை. ‘அடடா! இரை கிடைத்தும் அதனை உண்ண முடியாமல் இருக்கிறோமே!’ என்று அது வருந்தியது. ‘சரி, நமக்கு உடல் வலு இல்லையென்றால் என்ன, நாம் நமது புத்தியைப் பயன்படுத்துவோம்’ என்று நினைத்து அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது.
அந்த வழியாக ஒரு சிங்கம் வந்தது. நரி, சிங்கத்தைப் பார்த்து வணங்கியது. ‘எதற்காக இவன் நம்மை வணங்குகிறான்’ என்று அந்தச் சிங்கம் யோசித்தது.
பின்னர் அந்தச் சிங்கம், ‘நீ யார்?’ என்றது அந்த நரியை விசாரித்தது.
நரி, ‘நான் தங்களின் அடிமை. தாங்கள் அடித்துப்போட்ட இந்த யானையின் உடலுக்கு நான் காவலாக இருக்கிறேன்’ என்றது.
‘நான் இந்த யானையை வேட்டையாடவில்லை’ என்றது சிங்கம்.
‘இதனைத் தாங்கள் அடித்ததாக நினைத்துத்தான் நான் இதன் உடலைக் காவல்காக்கிறேன்’ என்றது.
‘இதனை வேறு யாராவது வேட்டையாடியிருப்பார்கள். அல்லது இந்த யானை தானாகவே இறந்திருக்கும். எது எப்படியோ நான் இந்த யானையின் உடலை உண்ண மாட்டேன். நீ இதற்குக் காவல் இருக்கவேண்டாம். உனக்கு வேண்டுமானால், நீயே இந்த யானையின் உடலை உண்டுவிடு’ என்றது சிங்கம்.
‘ஆகா! தங்கள் தாராள குணத்தை எண்ணி நான் மகிழ்கிறேன். வலிமையுடையவர்கள் எப்போதும் எளியவர்களுக்கு உதவுகிறார்கள்’ என்று கூறி, அந்தச் சிங்கத்தை மீண்டும் வணங்கியது நரி.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த வழியாக ஒரு புலி வந்தது. ‘ஆகா! இந்தப் புலி இந்த யானை உடலைத் தின்றுவிடுமே! இதனிடமிருந்து இந்த யானை உடலை எப்படிக் காப்பாற்றுவது?’ என்று யோசித்தது.
உடனே, அந்த நரி அந்தப் புலியிடம், ‘ஏய் புலியே! நீ ஏன் இங்கு வந்தாய்? திரும்பிச் சென்று விடு. இங்கு ஒரு சிங்கம் புலியைக்கொல்வதற்காகத் தேடிக்கொண்டிருக்கிறது’ என்றது.
‘ஏன் அது புலியைக் கொல்கிறது?’ என்று கேட்டது புலி.
‘அந்தச் சிங்கம் இந்த யானையை அடித்துக்கொன்றதாம். குளித்துவிட்டு வந்து இந்த யானையின் உடலை உண்ணலாம் என்று நினைத்துக் குளிக்கச்சென்றபோது, ஒரு புலி வந்து இந்த யானையின் உடலை உண்ண முயன்றதாம். அதைப் பார்த்து கோபம் கொண்ச்ட சிங்கம் அந்தப் புலியை விரட்ட, அது தப்பியோடி விட்டதாம். அதனால், மீண்டும் அந்தப் புலி வந்தால் என்னிடம் கூறு என்று சொல்லிவிட்டு அந்தச் சிங்கம் இந்தப் பக்கமாகச் சென்றுள்ளது. ஆதலால், நீ இங்கு இருக்காதே, அது உன் உயிரைப் பறித்துவிடும்’ என்று நரி அந்தப் புலியை எச்சரித்தது.
‘யானையைச் சாப்பிட வந்த புலி நான் அல்ல. அது வேறு புலியாயிருக்கும்!’ என்றது புலி.
‘இருந்தாலும், கோபத்திலிருக்கும் அந்தச் சிங்கத்திற்கு நான் விளக்கிக் கூறமுடியாது’ என்றது நரி. நரி கூறியதில் நியாயம் இருந்ததால் அந்தப் புலி திரும்பிச் சென்றுவிட்டது.
அடுத்து அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது. அதனைக் கண்ட நரி, ‘முதலில் வந்த சிங்கத்தை நாம் வணங்கி அனுப்பிவைத்தோம். இரண்டாவதாக வந்த புலியை எச்சரித்து அனுப்பிவைத்தோம். இப்போது மூன்றாவதாக வரும் இந்தக் குரங்கினைக்கொண்டு இந்த யானையின் தோலைக் கிழிப்போம். குரங்கு சைவம்தானே! அதனால், இது இந்த யானையின் உடலில் பங்கு கேட்காது’ என்று நினைத்தது.
அந்தக் குரங்கைப் பார்த்து, ‘நண்பா! என்ன உன்னை இந்தப் பக்கம் பார்க்கவே முடியவில்லை? எனக்கு சிங்கம் ஒரு வேலையைக் கொடுத்துள்ளது. இந்த யானையின் உடலை நான் பாதுகாக்க வேண்டுமாம். அது குளிக்கச் சென்றுள்ளது. அது திரும்பிவருவதற்குள் நான் இந்த யானையின் உடலைச் சிறிது சுவைக்க விரும்புகிறேன். உனக்குத்தான் திறமையான கைகளும் அவற்றில் கூர்மையான நகங்களும் இருக்கின்றன. எனக்கு உதவிசெய்யேன். இந்த யானையின் தோலைச் சற்று உரித்துக் கொடு’ என்றது. குரங்கு தன் கைகளால் அந்த யானையின் தோலை சிறிது உரித்தது. பின்னர் சென்றுவிட்டது. நரி யானையை உண்ணத் தொடங்கியது.
அப்போது வேறு ஒரு நரி வந்தது. அதனைப் பார்த்த இந்த நரி, ‘அட, நான்காவது ஆளாக நம் இனமே வருகிறதே! இதை ஏமாற்ற முடியாதே!’ என்று நினைத்த அந்த நரி, அதன் மீது பாய்ந்து சண்டையிட்டு அதனை விரட்டியடித்தது.
பின்னர் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தானே அந்த யானையின் உடலைச் சில நாட்களில் உண்டு முடித்தது.
‘ஆதலால் நீ உன் வீட்டில் புகுந்துகொண்ட அந்தப் பெரிய முதலையை வீண் வம்புக்கு இழுத்து அதனைக் கொல்லவேண்டும்.’ என்றது.
‘ஆஹா! உன்னைப் போல் நண்பன் கிடைக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்’ என்று முதலை மகிச்சியாகக் கூறியது.
‘அது உண்மைதான்! எல்லா வசதிகளும் இருந்தாலும் நல்ல நண்பன் இல்லாவிட்டால் சித்திராங்கனனைப் போலத் துன்பத்தை அனுபவிக்க வேண்டிவரும்’ என்று குரங்கு அந்த முதலையை எச்சரித்தது.
‘சித்திராங்கன் என்ன துன்பத்தை அனுபவித்தான்?’ என்று முதலை விசாரிக்க, குரங்கு அந்தக் கதையினைச் சொல்லத் தொடங்கியது.
4.9. சொந்த இடமே சுகம் தரும்
அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற நாய் வாழ்ந்து வந்தது. அதற்குச் சரியான எஜமானர் கிடைக்காமல், அனாதையாக தெருவில் சுற்றித் திரிந்தது. அதற்கு யாரும் உணவு தரவில்லை. நாள்தோறும் பசியில் வாடி, அலைந்துகொண்டிருந்தது.
ஒருநாள் அந்த நாய், ‘நாம் ஏன் உணவுகிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்கவேண்டும்? நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது.
தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது.
அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்துவந்தது.
ஒருநாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது.
அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயத்தோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பிவந்தது.
அந்த நாயின் நண்பர்கள், ‘என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது?’ என்று விசாரித்தன.
அதற்கு அந்த நாய், ‘அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால்தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன்’ என்றது.
‘ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம்’ என்ற குரங்கு, ’நீ உடனே புறப்பட்டு உனது வீட்டுக்குச் செல். அந்தப் பெரிய முதலையுடன் போராடு. வெற்றிபெற்றால் நீ உன் வீட்டைப் பெறுவாய். தோல்வியடைந்தால் நீ வீரசொர்க்கமடைவாய்’ என்று கூறியது.
முதலை தன் வீட்டிற்குச் சென்றது. அந்தப் பெரிய முதலையுடன் போரிட்டு, வென்றது. தன் வீட்டிலேயே வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தது.
நான்காம் தந்திரம் – லப்தஹானி (அர்த்தநாசம்) முற்றியது.

0 comments:

Post a Comment