தீய பழக்கம்ன்னா என்னம்மா?

Leave a Comment
கதை: புலியன் பூவை காதல் பறவைகள்.

புலியன் பூவை என்று இரண்டு காதல் பறவைகள் இருந்தனர். காட்டில் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர்.



ஆண் பறவை மிகுந்த சாதனைகளை செய்பவன். எதற்கும் அஞ்சாதவன். நினைத்ததை செய்து முடிப்பவன். தோல்வியை ஏற்காதவன். தோல்வியை என்றுமே சந்திக்காதவன். எந்தப் பறவையாலும் செல்ல முடியாத உயரங்களை பறந்து அடைவான். எல்லாப் பறவைகளும் அவனையே வேடிக்கைப் பார்க்கும். எந்தப் பறவையாலும் செல்ல முடியாத வேகத்தில் பறப்பான். எல்லாப் பறவைகளுக்குமே அவன் ஒரு கவர்ச்சி நாயகனாக அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தான். அவனை இந்தப் பெண் பறவைக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவனுக்கு இந்தப் பெண்பறவை வைத்த பட்டப் பெயர்தான் புலியன்.

அந்தப் பெண் பறவை மிகவும் அழகானவள். அவளது கண்கள் எல்லாப் பறவைகளுக்கும் மிகுந்த ஏக்கத்தை உண்டுபண்ணினது. அவளது உடல் மிகவும் மென்மையானது. அவளது இறகுகள் மிக அழகாக செதுக்கிய சிற்பத்தைப் போன்று வடிவுடன் இருந்தது. அவளது குரல் தேன் சொட்டுவதைப் போல ஒவ்வொரு வார்த்தையும். கேட்கக் கேட்க இனிமையாகவே இருக்கும் , என்றும் திகட்டாது. பறக்கும் விதம் யாரையுமே ஏங்கவைக்கும். அவள் உடன் இருந்தால் பிரிந்து செல்லவே மனம் வராது. இவளுக்கு இந்த ஆண் பறவை வைத்தப் பட்டப் பெயர்தான் பூவை.

புலியனும் பூவையும் மிகுந்த விருப்பத்துடன் இணைந்து வாழ்ந்தார்கள். புலியன் பூவைக்கு சிரமங்கள் வரும்போதெல்லாம் உடன் இருந்து காப்பாற்றுவான். அவன் காப்பாற்றும் விதமே ஆச்சர்யமாக இருக்கும், அழகாக இருக்கும். புலியனும் எப்போதுமே சிரமங்களில் மாட்டவே மாட்டான். மாட்டினாலும் எப்படியும் தப்பித்து வந்து விடுவான். அவன் என்றுமே பயப்பட்டதே கிடையாது. மிகவும் தைரியமானவன். அவனால் முடியாததே கிடையாது. எதையும் செய்து முடிப்பான். அதனால் பூவைக்கு, 'புலியன்' என்ற பட்டப் பெயர் மிகவும் பிடித்துவிட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி தனது சிறப்புகளால் சந்தோஷப்படுத்தி வாழ்ந்து வந்தனர்.

ஒருமுறை குளிர் காலம் வந்தது. அன்று மிகவும் கடும் குளிர். காட்டில் எந்த விலங்காலும் பறவையாலும் குளிரைத் தாங்க முடியவில்லை. நடுங்கின.

புலியன் பூவை காதல் பறவைகளும் கூட குளிரில் இருந்து காத்துக்கொள்ள வழிகளைத் தேடி பறந்துகொண்டு இருந்தனர். இருவரும் ஒரு பெரிய தொழிற்சாலையின் புகை போக்கியை சிம்னியை பார்த்தனர். அதிலிருந்து புகை கக்கிக்கொண்டு இருந்தது.

புலியன் உடனே அதனை நோக்கி விரைந்தான். பூவைக்கு புகையைப் பார்த்து மிகவும் பயம் ஆகி விட்டது. தயங்கினாள்.

புலியன் பயப்படவே இல்லை. புகைக்குள் நுழைந்தான். அது மிகவும் இதமாக இருந்தது. கதகதப்பாக இருந்தது. சுகமாக இருந்தது. “ ஆஹா, இதனை அனுபவிப்பதற்காகவே குளிர் காலம் வரலாம் போல் இருக்கிறதே, இதற்காகவே பறவையாகவும் பிறக்கலாம் போல இருக்கிறதே, என்ன சுகம், அருமை...”, என்று நினைத்து சொல்லி மகிழ்ந்தான். புகைக்குள் நன்கு நுழைந்து சுற்றிச்சுற்றிப் பறந்தான். பூவையையும் அழைத்தான்.

அவளோ மிகவும் மென்மையானவள். இதனைப் பார்க்கவே மிகவும் பயந்தாள்.  “இது நமக்கு வேண்டாம், வா போகலாம்” என்று உரக்கச் சொன்னாள் பூவை. புலியனோ, “அன்பே, பயப்படாதே, வா. நான் இருக்கிறேன். என்னைப் பார். எனக்கு ஒன்றும் ஆகவில்லையே நீ ஏன் பயப்படுகிறாய்? என்று தைர்யம் சொல்லிப் பார்த்தான். பூவையோ “அன்பே, வந்துவிடு பா, எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.” என்று கெஞ்சிக்கொண்டே இருந்தாள்.

புகைபோக்கியிலிருந்து திடீரென்று நெருப்பு ஜ்வாலை கக்கியது. அது புலியனின் இறகைப் பற்றியது. அது துவக்கத்தில் தனது இறகு எறிவதன் சூடு என்றே தெரியாமல் புலியன் புகுந்து சாதனைகளை செய்துகொண்டு இருந்தான். பூவை இதனைப் பார்த்து மிகவும் அலறினாள். “அன்பே நீ வெளியே வா, நீ ஆபத்தில் இருக்கிறாய் - என்று சொல்லி புகைக்குள் நுழைந்தாள். புலியனை தனது அலகினால் குத்தி இழுத்தாள். புலியனுக்கு ஒரு நொடி கோபம் வந்தது.

ஆனாலும் புலியனின் இறகில் சிறியதாய் பிடித்த தீ வளர்ந்தது. பிறகுதான் புலியனுக்கு தான் ஆபத்தில் இருப்பது தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், தீயின் சூடு தாங்க முடியாமல் புகைமண்டலத்தை விட்டு வெளியில் ஓடி வந்தான், ஆனாலும் இறகிலிருந்து தீ அணையவில்லை. சூட்டினைத் தாங்க முடியாமல் அலறினான். சுற்றிச் சுற்றி வந்தான். காற்று வீச வீச தீ மேலும் வேகமாக வளர்ந்தது.

பூவையின் மனம் மிகவும் வாடியது, காதலனின் சிரமத்தை தாங்கமுடியாமல் அருகில் பறந்து சென்று தனது இறகுகளால் தீயை அணைக்க வீசினாள். அந்தத் தீ பூவையின் இறகுகளையும் பற்றியது. ஆனாலும் பூவையோ புலியனுக்கு உதவ இறகினை வீசினாள். தீ மேலும் மேலும் இருவரின் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது.

இதனை காட்டில் இருந்த மற்ற விலங்குகளும் பறவைகளும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு மிகவும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தன. யாராலும் இப்போது பிரச்னையை தீர்க்க முடியவில்லை. உதவ நினைத்தாலும் முடியவில்லை. ஆனாலும் பல உற்ற நண்பர்களான பறவைகள் ஏதாவது உபாயம் கண்டுபிடிக்கவேண்டும் என்று ஏதேதோ செய்துகொண்டு இருந்தார்கள். ஆனாலும் தீ மிகவும் அவர்களின் உடலில் வளர்ந்து விட்டது. இறகுகள் மிகவும் கருகி சேதம் அடைந்தன. அவைகளால் பறக்க முடியவில்லை. உடல் நெருப்பினால் வேகத் துவங்கி விட்டது. கீழே விழுந்தனர். விழுந்து அலறினர்.

இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த ஒரு தாய்ப் பறவை தனது குஞ்சுப் பறவையிடம் சொன்னது, - இது போன்ற ஆபத்துகளை அறிவினால் முன்கூட்டியே கண்டுபிடிக்கவேண்டும் ஜாக்கிரதையாக வாழவேண்டும். இல்லை என்றால் தனக்கும், அழிவுதான். தன்னை சார்ந்தவர்களுக்கும் அழிவுதான் முடிவு. அந்த முடிவும் மிகவும் வருத்தப்பட வைப்பதாகவே இருக்கும். மூடர்கள் இப்படித்தான் வாழ்வார்கள்!” என்றது. குஞ்சுப் பறவை இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தது. காட்சியைப் பார்க்கப் பார்க்க அதன் கண்களில் நீர் வந்தது.


அந்த வழியாக ஒரு தாய் தனது குழந்தையுடன் சென்றுகொண்டு இருந்தாள், இருவரும்கூட இந்தக் காட்சியை முழுவதும் பார்த்தார்கள், 



குழந்தை மிகவும் வருந்தி அம்மாவிடம், “அம்மா பாவம் மா, அந்த பறவை ரெண்டுமே கஷ்டப்பட்டு அலறிக்கொண்டு,  துடி துடித்து இறக்கின்றன. எனக்கு பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது” என்றான் குழந்தை.

அதற்கு அம்மா சொன்னாள், “ ஆமாம், தங்கம், எனக்கும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உனக்கு ஒன்று தெரியுமா, இதே போன்றுதான் தீய பழக்கங்களும் மனிதர்களுக்கு தீ” என்று.

குழந்தை கேட்டான், “அம்மா தீய பழக்கம்ன்னா என்னம்மா?” என்று. தாய் சொன்னாள், “தங்கம், புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கொலைக்காரர்களின் நட்பு, திருடர்களின் நட்பு இவைகள் தீய பழக்கங்கள். "

"ஏன்மா அப்படி?" . என்றான் குழந்தை. 

புலியனுக்கு எப்படி புகை முதலில் கத கத என்று சுகமாக இருந்தது. பிறகு அவனையும் வேதனைப்படுத்தி அழித்தது, அவனது அன்புக் காதலியையும் வேதனைப்படுத்தி அழித்தது.   அதே போன்றுதான் இவைகளும்கூட.  இவைகள் துவக்கத்தில் கத கத என்று சுகமாக இருக்கும். பிறகு தன்னையும், சார்ந்தவர்களையும் கூட வேதனைப்படுத்தி அழித்துவிடும் - தீயைப் போன்றே. அதனால்தான் இவைகளுக்கு ‘தீய பழக்கம்’ என்று பெயர்” என்றாள்.

குழந்தை கண்களில் நீருடன் அந்த புலியனையும் பூவையையும் தீ எரிப்பதனை பார்த்துக்கொண்டே இருந்தான். அந்தப் பறவைகள் கடைசிக் குரலை எழுப்பின. துடிதுடித்து விழுந்து இறந்தனர். 

---------------------------------------------------------------------------------------------------------------------------

தீய பழக்கம் எது என்பதை 13வயதுக்குள் குழந்தைகளுக்கு அவசியம் சொல்லித்தர வேண்டும் - சரியான வார்த்தைகளில். 

சொல்லவே இல்லை என்றால், அது தீய பழக்கம், கூடாதது என்றே தெரியாமல்தான் இன்று நிறைய இளைஞர்கள் பலி ஆகிறார்கள். 

வரும் தலைமுறைக்கு உங்களால் கொஞ்சம் உதவ முடியுமா? 

0 comments:

Post a Comment