கண்ணுறவும் திரையுறவும்

Leave a Comment
கண்ணுறவுகளையும் திரையுறவுகளையும் நிர்வாஹம் செய்வது எப்படி?

 

கண்ணுறவுகளுடனும், திரையுறவுகளுடனும் மாறி மாறி வாழவேண்டி உள்ளது.

 

எப்போதுமே கண்ணுறவுகளிடத்தில் அதிக பொறுப்பும் கடமையும் உள்ளதை மறக்கக்கூடாது. நேரடியாகவும், உடனடியாகவும் சார்ந்துவாழும் நிலையில் விதி வைத்துள்ளதால்.


இதை மறந்தால் பல பிரச்சினைகளை உண்டுபண்ணும்.


உதாரணமாக, வண்டியோட்டும்பொது சாலையில் பயணம் செய்வோர் கண்ணுறவுகள், வீட்டிலோ அலுவலகத்திலோ இருப்பவர்கள் திரையுறவுகள்.


திரையுறவுகளுடன் ஃபோனில் சண்டை போட்டுக்கொண்டு வண்டியோட்டினால், விபத்து நடக்கிறது. அப்போது கண்ணுறவுகளுக்கு கவனம் தரவேண்டி உள்ளது.

 

அவ்வாறே, வீட்டில் இருக்கும்போது வீட்டில் இருப்போர் கண்ணுறவுகள். அலுவலகத்தில் இருக்கும்போது அங்கு உள்ளோர் கண்ணுறவுகள்.

 

ஃபோன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்றவை வந்துவிட்டதால் அலுவலகத்தில் இருந்துகொண்டு வீட்டு வேலைகளை செய்வதோ, வீட்டில் இருந்துகொண்டு அலுவலக வேலைகளை செய்வதோ பல பிரச்சினைகளை கொண்டுவரும். தவிர்க்கவும், குறைக்கவும் முயற்சி தேவை.


ஏனெனில் கண்ணுறவுகள்தான் சோறுபோடுகிறது. திரையுறவுகள் இல்லை. ஒரு விபத்தில் சிக்கினால் கண்ணுறவுகள்தான் அவசரத்திற்கு உடன் இருக்கும் திரையுறவுகள் இல்லை.


அதேசமயம், சிலர் கண்ணுறவுகளில் நன்கு முழுகி திரையுறவுகளை முழுவதும் நிராகரிக்கின்றனர். அதாவது தொழிற்களத்தில் இருக்கும் போது, அவசரகால வீட்டு அழைப்புகளைக்கூட கவனிப்பதில்லை. அவ்வாறே, வீட்டில் இருக்கும் போது அவசரகால தொழிற்கள அழைப்புகளைக்கூட கவனிப்பதில்லை. இன்றைய வாழ்வியலில் அது நியாயமாக முடியாது.


கண்ணுறவுகளில் 99% கவனமும், திரையுறவுகளில் 1% கவனமும் இருக்கவேண்டும்.

 

பொதுவிதிகளிலிருந்து அவசர கால விதிகள் எப்போதுமே மாற முடியும்.


விதி ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சிலரை கண்ணுறவுகளாக வைக்கிறது என்றால் ‘அவர்களிடத்தில் இப்போது நீ அதிக கவனம் தரவேண்டும்’ - என்பதே விதியின் எதிர்பார்ப்பு. 


அதேபோலவே, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சிலரை, திரையுறவுகளாக வைக்கிறது என்றால் ‘அவர்களிடத்தில் இப்போது நீ குறைந்த கவனம் தந்தால்போதும்’ - என்பதே விதியின் எதிர்பார்ப்பு.


கண்ணுறவுகளை காத்திருக்க வைத்துவிட்டு - திரையுறவுகளில் லயிப்பது தவறே. 


‘கண்ணுறவில் மனலயனம்’ - விதி.


விதியை மதித்தோரை விதி மதிக்கிறதே.
விதியை மிதித்தோரை விதி மிதிக்கிறதே.

0 comments:

Post a Comment