விதியின் பலம் என்ன?

Leave a Comment

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும் - என்பதே விதிப்படிதான்!!!
 
இந்திரன்மனைவி இந்திராணி மிகவும் பிரியமாக ஒரு கிளியை வளர்த்து வந்தாள்.

அந்த கிளி ஒருநாள் நோய்வாய்ப்பட்டுவிட்டது.


அதை பரிசோதித்த மருத்துவர், ‘இனி அது பிழைக்காது’ என்று கூறிவிட்டார்.

இந்திராணி உடனே தன் கணவனை அழைத்து, ‘இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள், கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன்’, என்றாள்.


இந்திரனும், ‘கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்... ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம்.’  என்று சொல்லிவிட்டு பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா, ‘இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை. உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன்’, என்று கூறி இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

அதற்கு மஹாவிஷ்ணுவோ, ‘உயிர்களை காப்பது நான்தான்.
ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயில் இருக்கிறது. அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும். வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன்’, என்று கிளம்பினார் விஷ்ணுவும்.

விபரங்களைக்கேட்ட சிவன், ‘அழிக்கும் தொழில் என்னுடையதுதான். உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான் யமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன். வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று யமதர்மனிடம் சென்று அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம்’, என்றுசொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் சென்றார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட யமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்றார்.

அவர்கள் வந்த விஷயம் முழுவதையும்கேட்ட யமதர்மர், ‘ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் , எந்தசூழ்நிலையில் , என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம். அந்த ஓலை அறுந்து விழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும். வாருங்கள் அந்த அறைக்குச்சென்று கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம்’, என்று கூறி அவர்களை அழைத்துச் சென்றார்.

இப்படியாக...
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , யமதர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுந்தது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்த்தனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப் பார்த்தனர்....

அதில்,...

‘இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது இந்த கிளி இறந்துவிடும்’.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!

விதியை யாரால் மாற்ற முடியுமோ?!

யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!!!.... என்பது எழுதினவனுக்கே
தெரியாது என்பது தான் உண்மை?!

0 comments:

Post a Comment